வாணியம்பாடி அருகே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து, கடந்த ஜனவரி 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலையானார். ஆனால் தனது உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு உடல் நலம் தேறிய தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூருவில் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் பெங்களூருவில் இருந்து இன்று சசிகலா தமிழகம் திரும்பியுள்ளார். தமிழக எல்லையில் அவரின் ஆதரவாளர்கள் ஆரவார வரவேற்பு அளித்தனர். அவர் ஓசூர் ஜூஜூவாடி அருகே வந்து கொண்டிருந்த போது அவரின் காரில் அதிமுக கொடி பறந்தால், கார் தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு வேறு ஒரு காரில் சென்னை நோக்கி அவர் புறப்பட்டார்.
இந்நிலையில் சென்னை வந்து கொண்டிருக்கும் சசிகலா வாணியம்பாடி அருகே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அதிமுக அலுவலகத்திற்கு செல்வீர்களா? என்ற கேள்விக்கு, “பொறுத்திருந்து பாருங்கள்”என்று பதிலளித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், கொடியை நான் பயன்படுத்தியதற்காக அமைச்சர்கள் புகார் அளித்தது அவர்கள் பயத்தை காட்டுகிறது. தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை. விரைவில் அனைவரையும் சந்திப்பேன். நிச்சயமாக தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று அவர் கூறியுள்ளார்.