தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் கடந்த வாரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வங்க கடலில் கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தாலும் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி , கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அரபிக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவின் வடபகுதியில் தென் மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது வடக்கு கேரளா மற்றும் தெற்கு கர்நாடகா கடற்கரை பகுதிகள் வழியாக அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்கிறது. இதனால் கனமழை நீடிக்கும். ஏற்கனவே மாண்டஸ் புயல் ஒரு காட்டு காட்டி விட்டு சென்ற நிலையில் அடுத்த புயலுக்கு தயாராக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.