இந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து குறித்து லைக்கா நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் பிப்.,7ஆம் தேதி முதல் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இவிபி பிலிம் சிட்டியில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் செட் அமைக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக, ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன் அறுந்து விழுந்தது. பல அடி உயரத்தில் இருந்து விழுந்த ராட்சத கிரேனில் சிக்கி, 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா,மது மற்றும் சந்திரன் ஆகியோர் இந்த விபத்தில் பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இணை இயக்குனர் குமார் நசரத்பேட்டை காவல்நிலையத்தில் லைக்கா நிறுவனம் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யவில்லை , கிரேன் ஆப்ரேட்டர் அஜாக்கிரதையாக இருந்தார்என்று புகார் கொடுத்ததன் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் கிரேன் ஆபரேட்டர் ராஜன் , லைகா நிறுவனம் உரிமையாளர் , புரொடக்ஷன் மேனேஜர் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.