தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.
ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் தமிழகம் முழுவதும் நாளை நள்ளிரவு முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு எதிரொலியாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு காலை நேரத்தில் அரசு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு ஊரடங்கின் போது பேருந்துகளை இயக்க அனுமதி இல்லாததால்,கோயம்பேட்டில் இருந்து நாளை முதல் பகல் நேரங்களில் மதுரை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவிலுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.