புதுச்சேரி சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு சட்டமன்றக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு , தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என்ற அரசின் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார். இது தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரும் வெளிநடப்பு சேதனர். இந்த கூட்டத்தொடரை புறக்கணிக்கும் வகையில் அதிமுக , பிரதான எதிர்க்கட்சியான NR காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்த தீர்மானத்தை காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் விவாதித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்ததை தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி பேசும் போது , மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய எந்த ஒரு சட்டத்தையும் தன்னுடைய அரசு ஏற்றுக் கொள்ளாது என்ற கருத்தை வைத்திருக்கின்றார். இதையடுத்து திமுக , காங்கிரஸ் மற்றும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதராவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.