தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கை ஒரு வாரத்திற்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு குறைந்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் சிறப்பு சிகிச்சை மையங்களையும் முதல்வர் தொடங்கி வைத்து வருகிறார்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் எடப்பாடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தபோது பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு கொரோனா இறப்பை குறைத்து காட்டுவதாகவும், இறப்பு விவரத்தை வெளிப்படையாக வெளியிட வேண்டும் எனவும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மேலும் சேலம் மாவட்டத்தில் கூடுதலாக ஆக்சிஜன் படுக்கைகளை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.