புத்தகப் பிரியர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 9-ஆம் தேதி தொடங்க உள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 9-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை 13 நாட்கள் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த புத்தக கண்காட்சியில் பல லட்சம் தலைப்புகளில் ஒரு கோடி புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
இதற்காக வாசகர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பபாசி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். புத்தகக் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான அரங்குகள் அமைக்கப்பட்டு இருக்கும் என்பதால் அனைத்து அறங்குகளையும் வாசகர்களால் பார்வையிடமுடியாது. அதனை கருத்தில் கொண்டே வாசகர்களுக்கு ஆப் வசதி செய்யப்பட்டு உள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த ஆண்டு கண்காட்சியில் குழந்தைகளுக்கென தனி அரங்குகள், விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் அரங்குகள் என தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வாசகர்கள் அதிகம் சிரமப்படாமல் தேவைப்படும் புத்தகங்களை தேடிப் பிடிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.