நடிகர் விஜய் சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு மர்ம அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர், “நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளது ” என மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் நடிகர் விஜயின் வீட்டிற்கு நள்ளிரவு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அவ்வாறு நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்காததால் இது வெறும் புரளி என தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது நபர் யார்? என போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் விழுப்புரத்தை சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சாலிகிராமத்தில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.