கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பாஜகவினர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மனுதர்மத்தில் சொல்லி உள்ளதாக கூறி விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக பெரும் சர்ச்சை எழுந்தது. அவர் பேசியதை கண்டித்து பாஜக மகளிரணி சார்பாக இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. சிதம்பரத்தில் நடைபெறும் போராட்டத்தில் அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு பங்கேற்க இருந்தார்.இதே போல சிதம்பரத்தில் பாஜக எங்கு போராட்டம் நடத்துகின்றதோ…. அதே இடத்தில் விடுதலை சிறுத்தை கட்சியும் போராட்டம் நடத்தும் என்று விடுதலைச் சிறுத்தை மகளிரினி அறிவித்தது.
இதனால் சிதம்பரத்தில் பாஜக, விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம் நடத்த தடைவிதித்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டது. இருந்தாலும் தடையை மீறி இரு கட்சிகளும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. நேற்று இரவே 1500 போலீசார் குவிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் வடக்கு மண்டல ஐஜி நாகராஜ், விழுப்புரம் சரக டிஐஜி, கடலூர் மாவட்ட எஸ்பி அபிநவ் தலைமையில் மாவட்டம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு, மாவட்டம் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அதே போல சென்னையில் இருந்து போராட்டம் நடத்த வரும் குஷ்புவை மாவட்ட எல்லையில் கைது செய்ய திட்டமிட்ட போலீசார் முட்டுக்காடு பகுதியில் கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இந்த நிலையில்தான் சிதம்பரம் பகுதியில் போராட்டம் நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்ச, பாஜகவினர் வந்தபோது அவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்துள்ளனர். மீறி போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார். இதனால் கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.