நிலைதடுமாறி புளிய மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தாயுமானசுவாமி கோவில் தெருவில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவரும் ராமநாதபுரத்திலிருந்து லட்சுமிபுரம் ஊரணி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது இவர்கள் தேவிபட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறிய மோட்டார்சைக்கிளானது ரோட்டின் ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பெயிண்டரான இவ்விருவருக்கும் திருமணம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து பால்பாண்டியன் தாயார் சுசிலா அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.