தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிவர் புயல் காரணமாக நாளை மறுநாள் நடைபெற இருந்த குரூப் 2 மூன்றாம் கட்ட நேர்முக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றது. மறு தேதி குறிப்பிடாமல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. ஏற்கனவே நாளை 16 மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்ட நிலையில், ரயில், விமான சேவையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.