புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இதற்கு மத்தியில் புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவதால் காங்கிரஸின் பலம் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று இரண்டு எம்எல்ஏக்கள் பதவி விலகினார். இந்நிலையில் புதுச்சேரியில் பெரும்பான்மையை முதல்வர் நாராயணசாமி நிரூபிக்கவேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவிட்டார். அதன் படி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.
இந்நிலையில் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார். அதனால் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. பேரவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வியில் முடிந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியால் நாராயணசாமி பேரவையில் இருந்து வெளியேறினார்.