ஆப்கானிஸ்தானில் பரபரப்பான சூழலில் காபூல் விமான நிலையத்தில், அமெரிக்க வீரரிடம் கொடுக்கப்பட்டிருந்த குழந்தை காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறினார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதியன்று காபூல் நகரில் விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாரான அமெரிக்க விமானத்தில் செல்ல சுமார் நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் முயன்றனர்.
அப்போது, ஆப்கானிஸ்தானை சேர்ந்த மிர்சா அலி அகமதி-சுரயா தம்பதி, நுழைவாயிலுக்கு விரைவில் சென்று விடலாம் என்று நம்பி தங்கள் குழந்தையை அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரிடம் கொடுத்தார்கள். அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவியது. ஆனால், தற்போது அந்த குழந்தை பெற்றோர்களிடம் இல்லை எனவும் குழந்தையை அவர்கள் தேடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தம்பதியினருக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். அதில் நான்கு குழந்தைகள் கத்தார் மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்பின்பு, கடைசியாக அமெரிக்காவில் இறக்கிவிடப்பட்டனர். தற்போது அவர்கள் குடும்பமாக டெக்ஸாஸில் இருக்கும் போர்ட் பிளிஸ்ஸ்-ல் ஆப்கானிஸ்தான் அகதிகளோடு தங்கியிருக்கிறார்கள்.
மிர்சா அலி, சுமார் பத்து வருடங்களாக ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க தூதரகத்தில் காவலாளியாக பணியாற்றி இருக்கிறார். தற்போது அவர், தனக்கு தெரிந்த அனைத்து அதிகாரிகளிடமும் தன் குழந்தை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பில் அவர் தெரிவித்திருப்பதாவது, நான் 20-க்கும் அதிகமான அதிகாரிகளிடம் கேட்டேன். குழந்தையை எங்கு வைத்திருக்கிறார்கள்? என்று தற்போது வரை எங்களுக்கு தெரியவில்லை என்று அவர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளதாவது, அமெரிக்க தளங்களுக்கும் வெளிநாட்டில் பல இடங்களுக்கும் குழந்தை குறித்த தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. கடைசியாக குழந்தை, பரபரப்பான சூழ்நிலையில் காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க வீரர் ஒருவரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனினும் துரதிஷ்டவசமாக, குழந்தையை கண்டறிய முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.