கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மந்திரியை கொலை செய்ய நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவருடைய இளம் வயது மகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிபர் யோவேரி முசவேனி தலைமையிலான ஆட்சி கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் நடைபெற்று வருகிறது. இவருடைய மந்திரி சபையில் முன்னாள் ராணுவ தளபதியான கட்டும்பா வாமலா என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு போக்குவரத்து மற்றும் தொழில்துறை மந்திரியாக பொறுப்பேற்றார். இந்நிலையில் தலைநகர் கம்பாலாவில் உள்ள புறநகர் பகுதியில் 64 வயதான மந்திரி கட்டும்பா வாமலா தன்னுடைய காரில் தனது இளம்வயது மகள் நாந்தோங்கோ உடன் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கடும்பாவின் கார் மீது மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர்.
அதில் கார் டிரைவர் மற்றும் மகள் நாந்தோங்கோ ஆகிய இருவருடைய உடலிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. அதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் காரிலேயே பரிதாபமாக இறந்து விட்டனர். அதேசமயம் மந்திரி கட்டும்பா வாமலா பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.