புது ஆற்றில் குதித்த பள்ளி மாணவியை காப்பாற்றச் சென்ற வாலிபரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மானம்புச்சாவடி வைக்கோல்காரத் தெருவில் ஷேக் மைதீன் மகள் ஆயிஷா பேகம் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் காந்திஜி சாலையில் உள்ள ஆற்றுப் பாலத்தின் அருகில் ஆயிஷா பேகம் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஆயிஷா பேகம் திடீரென கல்லணை கால்வாய் என்ற புது ஆற்றில் குதித்துள்ளார். இதனை பார்த்த அதே பகுதியில் பிளாக்ஸ் நிறுவனத்தில் பதாகை வடிவமைப்பு பணி மேற்கொண்டு வரும் பூதலூரை சேர்ந்த முகிலன் என்பவரும், அவருடன் வேலை பார்க்கும் மற்றொரு வாலிபரும் ஓடி வந்து ஆற்றில் குதித்து மாணவியை காப்பாற்ற முயற்சி செய்தனர். அப்போது இருவரையும் தண்ணீர் இழுத்து சென்று விட்டது. இதனையடுத்து முகிலனுடன் ஆற்றுக்குள் குதித்த வாலிபர் தஞ்சை சுற்றுலா ஆய்வு மாளிகை பகுதியில் உள்ள படித்துறையில் ஏறிவிட்டார்.
ஆனால் ஆயிஷா பேகமும், அவரை காப்பாற்ற சென்ற முகிலனும் தண்ணீரில் மூழ்கி விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த நிலைய அதிகாரி திலகர் தலைமையில், தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் குதித்து தண்ணீரில் மூழ்கிய 2 பேரையும் தீவிரமாக தேடி பார்த்தனர். அப்போது தஞ்சை காந்தி சாலை ஆற்றுப்பாலம் முதல் வெட்டிக்காடு வரை தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் 7 மணி நேரம் தேடிப்பார்த்து அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதன்பின் இரவு நேரம் ஆகிவிட்டதால் தீயணைப்புத்துறை வீரர்கள் 2 பேரையும் தேடும் பணியை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனைத்தொடர்ந்து இன்று மீண்டும் ஆற்றில் குதித்து தீயணைப்புத்துறை வீரர்கள் அவர்கள் 2 பேரையும் தேடி பார்த்தனர். அப்போது தஞ்சை ஆற்றுப்பாலம் அருகில் கிடந்த பேக் மற்றும் அதிலிருந்து அடையாள அட்டையை வைத்துதான் தண்ணீரில் குதித்தது ஆயிஷா பேகம் என தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவி ஆற்றில் குதித்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.