மணப்பெண் வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் மூணாறு பகுதியில் ஜெயராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பட்டப்படிப்பு படித்து முடித்த நிஷாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டசோழபுரம் பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணும், நிஷாந்தும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததால் கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியன்று இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து வருகின்ற 17 ஆம் தேதி அன்று நிஷாந்துக்கும் அந்தப் பெண்ணிற்கும் திருமணம் செய்வதாக குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நிஷாந்த் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக அரியலூரில் இருக்கும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அந்தப் பெண்ணின் வீட்டில் மீன் குழம்பு வைத்து நிஷாந்திற்கு சாப்பாடு பரிமாறி உள்ளனர். அதனை சாப்பிட்ட பிறகு நிஷாந்த் திடீரென வாந்தி எடுத்து மயக்கம்போட்டு கீழே விழுந்தார். இதனைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் பெற்றோர்கள் நிஷாந்தை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த பார்த்த மருத்துவர்கள் நிஷாந்த் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இவ்வாறு மகன் இறந்த செய்தியை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த நிஷாந்தின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி மருத்துவமனைக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நிஷாந்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.