கர்நாடகாவில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த போது கிணற்றுக்குள் தவறி விழுந்த புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கங்கோலி பகுதியை சேர்ந்தவர் 38 வயதான லட்சுமணன் பூஜாரே. இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் அப்பகுதியில் ஒரு பெரிய கிணறு தோண்டும் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது.
அப்பொழுது அதன் அருகில் நின்று கொண்டிருந்த லட்சுமணன் பூஜாரே திடீரென கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த நபர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக உள்ளே இறங்கி லட்சுமணனை வெளியில் தூக்கினர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
38 வயதில் திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில், புதுமாப்பிள்ளை எதிர்பாராத விதமாக உயிரிழந்தது அந்த பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.