பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. 1 ஆண்டுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உரிழந்ததாக சொல்லப்படுகின்றது.
இதனையடுத்து இன்று காலை மக்களிடம் பேசிய பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி “நாட்டிற்கு உணவளிக்கும் விவசாயிகளின் சத்யாகிரக போராட்டத்திற்கு ஆணவம் அடிபணிந்தது. அநீதிக்கு எதிரான வெற்றிக்கு வாழ்த்துக்கள். நான் ஏற்கனவே மத்திய அரசு திரும்ப பெறும் என கூறியதையும் நினைவுப்படுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.