அனைவருக்கும் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை தயவுசெய்து பதுக்காதீர்கள் என மக்களுக்கு அமிதாப்பச்சன் வேண்டுகோள் வைத்துள்ளார்
கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் மத்திய மாநில அரசு மிகவும் கவனமாக இருக்கின்றன. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை பதுக்காதீர்கள் என வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, “பிரதமர் மோடியின் உத்தரவை ஏற்று நாடு முழுவதிலும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த சமயத்தில் கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்கள் அனைத்து மக்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதுபோன்று சுயநலமில்லாமல் பணியாற்றுபவர்களால் தான் ஊரடங்கு நல்ல முறையில் நடக்கிறது.
மருந்துகளும் உணவுப்பொருட்களும் தடையின்றி கிடைக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு மக்களுக்கு இருக்காது, அதனால் மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். தயவுகூர்ந்து யாரும் அத்தியாவசிய பொருட்களை பதுக்காதீர்கள். வீட்டிலேயே அனைவரும் பாதுகாப்போடு இருங்கள்” இவ்வாறு கூறியுள்ளார்.