கொல்கத்தா நகரில் பேரணியின் போது அமித்ஷா வந்த பிரச்சார வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.
இந்நிலையில், பா.ஜ.க தலைவர் அமித் ஷாவின் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்துக்காக ஜாதவ்பூர் பகுதியில் மிக பெரிய பிரமாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர். இந்த பேரணியில் பங்கேற்பதற்காக அமித் ஷா வரும் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அம்மாநில அரசு அனுமதிக்க மறுத்ததால் அம்மாநில பாஜக தொண்டர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
இந்த பேரணி ரத்து செய்ய பட்டதால் ஜாய்நகர் பகுதியில் இன்று நடைபெற்ற மற்றொரு பிரசார கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்றார். அப்போது பேசிய அவர் “நான் இன்று 3 பிரசார கூட்டங்களில் பேசுவதாக இருந்தேன். மம்தாவின் மருமகன் போட்டியிடும் தொகுதியில் நான் பிரச்சாரம் செய்தால் அவர் தோற்பது உறுதி என்பதால் அங்கு என்னுடைய பேரணிக்கு அனுமதியை மறுத்துவிட்டனர். எனது பிரசாரத்திற்கு மட்டும்தான் மம்தாவால் தடை விதிக்க முடியும். ஆனால், எங்களது வெற்றியை அவரால் தடுத்து நிறுத்த முடியாது.
மத்திய அரசு கொண்டுவரும் பல திட்டங்களின் பலன்களை இங்குள்ள மக்களுக்கு வந்து சேராத வகையில் மம்தாவின் அரசு தடுத்து விட்டது. அந்த திட்டங்களின் மூலம் இங்குள்ள மக்கள் மத்தியில் பிரதமர் மோடி பிரபலமடைந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் மம்தா இந்த திட்டங்களையெல்லாம் எதிர்த்து வருகிறார். இம்மாநிலத்தில் உள்ள மக்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்டால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். “நான் இந்த மேடையில் இருந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்குகிறேன். நாளை வரையில் நான் கொல்கத்தாவில் தான் இருப்பேன். முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள். மம்தாவுக்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன்” என அமித் ஷா பேசினார்.
இந்நிலையில், கொல்கத்தாவில் இன்று மாலை நடைபெற்ற பா.ஜ.க பேரணியில் அமித் ஷா பங்கேற்றார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தை கடந்து வந்த அமித்ஷா சுமார் 7 மணியளவில் கல்லூரி சாலைக்குள் நுழைந்தார். அப்போது அமித் ஷா இருந்த பிரசார வாகனத்தின் மீது சில கம்புகள் வீசப்பட்டன. இந்த கலவரத்தால் அங்கு பதற்றம் நிலவியது.
இதனால் பேரணியில் வந்தவர்களுக்கும், வேறொரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் சாலையோரத்தில் இருந்த கட் அவுட்டுகள் அடித்து கிழித்து நாசப்படுத்தப்பட்டன. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியதால் கூட்டம் கலைந்து சென்றது. மோதலில் சில இடங்களில் தீவைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கொல்கத்தா நகர மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் அங்குள்ள பல பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.