தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பநிலை காரணமாக ஜூன் 10ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.