அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கேட்காமலேயே மக்களுக்கு அனைத்தையும் வழங்கும் ஆட்சி என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103 ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை அதிமுகவின் கோட்டையாக மாறியுள்ளது என்றும், இனி வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவை எந்த கட்சியாலும் வெற்றி பெற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது மக்கள் கேட்காமலேயே அவர்களுக்கு தேவையானதை இந்த ஆட்சி செய்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். அதோடு அடுத்த ஆண்டு முதல் பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்த செங்கோட்டையன், பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் ஏற்பாடு செய்யப்படும் அதற்காக 72,000 ஸ்மார்ட்போர்டுகள் விரைவில் கொண்டுவரப்படும் என்றும் அவரது உரையில் தெரிவித்தார்.