ஆப்கானிஸ்தான் குடியிருப்பு பகுதியில் குண்டு வெடித்ததால் 15 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசுக்கும் அந்த நாட்டில் வசிக்கும் தாலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக இந்த போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் இருதரப்பும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனாலும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதே சமயத்தில் ராணுவமும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதலை நடத்திக் கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள காஷ் ரோடு என்ற மாவட்டத்தில் தாலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவம் வான் தாக்குதலை நடத்தியது. அப்போது அங்குள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் எதிர்பாராவிதமாக குண்டுகள் விழுந்து வெடித்ததில் பொதுமக்கள் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வான் தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தான் ராணுவம் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. மேலும் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த குண்டுவெடிப்பில் மக்கள் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளரான சியா வடான் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.