ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டு 34 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாத அமைப்பு கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் பதினொன்றாம் தேதி அமெரிக்காவில் உள்ள வர்த்தக மையம் மற்றும் ராணுவ தலைமையகத்தில் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தியது. இதில் 3000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, அல்கொய்தா பயங்கரவாத அமைப்பிற்கு அடைக்கலம் கொடுத்து வந்த ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது.
இதில் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வந்த தலிபான் பயங்கரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டு அங்கே ஜனநாயக ஆட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இருந்தபோதிலும், தலிபான் பயங்கரவாதிகள் முற்றிலுமாக ஒழிக்கப்படாமல் இன்றும் அவர்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர் அவர்களை ஒடுக்க ஆப்கானிஸ்தான் அரசு படைகளும், அமெரிக்காவும் இணைந்து பல்வேறு தாக்குதல்களை பயங்கரவாதிகள் மீது நடத்தி வந்தனர்.
அதே சமயம் அமைதி பேச்சுவார்த்தையும் மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த ஜூலை 19 ஆம் தேதி அன்று ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் நகரில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர். அதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 27 பேர் படுகாயமடைந்திருந்தனர்.
இதையடுத்து மீண்டும் ஆப்கானிஸ்தானில் இதற்கு முன்பு நிகழ்த்தியதை விட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஹெராத்-காந்தகார் நெடுஞ்சாலையில் நிகழ்த்தப்பட்ட இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.