அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அம்மனந்தாங்கல் காலனி உள்ளது. இந்த காலனியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய், சாலை வசதி போன்றவைகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அம்மனந்தாங்கல் பகுதியில் உள்ள ஒருசில தெருக்களில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. ஆனால் அந்த கால்வாயில் கழிவுநீர்கள் வெளியேறாமல் தேங்கி நிற்பதால் குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ள மக்கள் பலமுறை வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனுக்கள் கொடுத்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் கடந்த 20 – ஆம் தேதி அம்மனந்தாங்கல் பகுதியில் உள்ள மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து மனு அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பொது மக்கள் ஆத்திரமடைந்து சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வாலாஜா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் காவல்துறையினர் உடனடியாக அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின் அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.