திருவள்ளூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு, மருந்து வாங்கச் சென்ற தந்தையிடம் போலீசார் அபராதம் வசூலித்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 49). இவர் தனது மனவளர்ச்சி குன்றிய மகனுக்காக ,மருந்து வாங்குவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி உள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறியதாக , அவரிடம் போலீசார் ரூபாய் 500 அபராதமாக வசூலித்தனர். தன்னுடைய மகனுக்கு மருந்து வாங்குவதற்காக வைத்திருந்த, 500 ரூபாயை போலீசாரிடம் அபராதம் செலுத்திவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
சோகத்துடன் வீடு திரும்பிய அவர் ,முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் , தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றிய தகவலை பதிவிட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதலமைச்சரின் உத்தரவின்படி திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டரான ரஜினிகாந்த், பாலகிருஷ்ணனின் வீட்டிற்கு நேரில் சென்று, அவர் அபராதமாக செலுத்திய பணத்தை திருப்பிக் கொடுத்து மருந்து, மாத்திரைகளையும் வாங்கி கொடுத்துள்ளார். அதோடு இந்த சம்பவம் தெரியாமல் நடந்து விட்டதாகவும், நடந்த தவறுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார். எனவே முதலமைச்சரின் நடவடிக்கைக்கு குடும்பத்தினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.