தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்புவதுடன் அதில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கினால் அரசாங்கத்தை நம்பி படித்து ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நியாயம் செய்வதாக அமையும் என தெரிவித்துள்ளார். 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று சுமார் ஒரு லட்சம் பேருக்கு இன்னும் பணி வழங்கப்படாத நிலையில் அவர்கள் பெற்ற ஏழு ஆண்டுகளுக்கான தகுதி சான்றிதழ்களை ஆயுட்காலமாக மாற்றி தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் வலிவுறுத்தியுள்ளார். பேராசிரியர் பணிக்கான SLET, NET போன்ற தகுதி தேர்வுகளின் சான்றிதழ் ஆயுள் முழுமைக்கும் செல்லுபடி ஆவது போல இதனையும் மாற்றி அமைத்திட வேண்டும் என்றும் திரு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.