செம்பனார்கோவில் அருகே உடல் நலக்குறைவால் மன வேதனையடைந்த வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உமையாள்புரம் கிராமத்தில் கருவேல மரக்காடு இருக்கிறது. இந்த காட்டிலுள்ள ஒரு மரத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் தொங்கியது. இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் செம்பனார்கோவில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல்துறையினர், அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
இந்தசம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தூக்கில் பிணமாக தொங்கியவர், மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த பக்கிரிசாமி மகன் வேலு (35) என்பதும், உடல் நலக்குறைவால் மன வேதனையடைந்த அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இந்தசம்பவம் குறித்து செம்பனார்கோவில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.