தன்னுடைய பெற்றோரை ஒருமையில் பேசியதாக காவல் உதவி ஆய்வாளருடன் ஒருவர் கைகலப்பில் ஈடுபட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் தள்ளுவண்டி உணவுக்கடை நடத்திவருபவர் வேல்மயில். இவர் வழக்கம்போல் ஜூன் 17ஆம் தேதி தன்னுடைய மனைவி மற்றும் பள்ளியில் படிக்கும் மகனுடன் கடையில் வியாபாரம் செய்துவந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக 8 மணிக்கு மேல் கடையைத் திறந்துவைப்பதற்கு அனுமதியளிக்காத போதிலும், அவர் கடையை திறந்து வைத்துள்ளார்.
அதனால் அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் செல்லமணி உடனடியாகக் கடையை மூடிவிட்டு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளார்.. ஆனால் வேல்மயில் கடையை மூடாமல் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது..
இதனால் வேல்மயில் மற்றும் அவரது மனைவியை உதவி ஆய்வாளர் செல்ல மணி ஒருமையில் பேசினார். இதனைக் கண்ட அவர்களது மகன் கடும் ஆந்திரமடைந்து உதவி ஆய்வாளர் வந்த பைக்கின் சாவியை பிடுங்கி வைத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த உதவி ஆய்வாளர், அவரை (சிறுவன்) லத்தியால் தாக்கினார். இதையடுத்து இருவருக்குமிடையே கைகலப்பானது. அப்போது சிறுவனது தந்தையும், தாயும் மகனை விட்டுவிடும்படி கெஞ்சினர்.. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.. பின்னர் ஆய்வாளர் மாணவனை காவல் துறையின் வாகனத்தில் ஏற்றி ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றார்.
மேலும் வேல்மயில் மீது பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்துவதாக இந்திய தண்டனைச் சட்டம் 75 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து விடுவித்தனர். இந்நிலையில், போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்ட வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவிவருகின்றது.