டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம் பெண் 35 துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் ஷ்ரத்தாவின் காதலர் அப்தாப்பை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திய நிலையில், பல்வேறு விதமான திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதன் பிறகு அப்தாப் கொடுத்த தகவலின் பேரில் டெல்லி முழுவதும் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 13 எலும்பு துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எலும்பு துண்டுகள் ஷ்ரத்தாவின் எலும்புகளா என்பதை ஆய்வு செய்வதற்காக டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் மெஹ்ராலி என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்பு துண்டின் மரபணுவும், ஷ்ரத்தாவின் தந்தையின் மரபணுவும் தற்போது ஒத்துப்போனதாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஷ்ரத்தா பயன்படுத்திய செல்போன் இன்னும் கண்டறியப்படாத நிலையில், போலீசார் தொடர்ந்து செல்போனை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் எலும்பு துண்டுகள் கண்டறியப்பட்ட இடங்களில் சில துணிகளும் கிடைத்துள்ளது. இந்த துணிகள் ஷ்ரத்தாவின் துணிகளா என்பதை ஆய்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.