உரிமையாளருக்காக சீட்டோஸ் பாக்கெட் வாங்க கடைக்குச் சென்ற நாயின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. முதல்கட்டமாக அனைத்து நாடுகளுமே மக்கள் அனைவரும் வீட்டிலே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனால் மக்கள் வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. இந்த சமயத்தில் சில மக்களின் கிரியேட்டிவ் ஐடியாவும் வெளியே எட்டிப்பார்க்கிறது.
ஆம், மெக்ஸிகோவை சேர்ந்த அன்டோனியோ முனோஸ் (antonio munoz) என்பவர் தனக்குத் தேவையான சீட்டோஸ் பாக்கெட்டை வாங்குவதற்கு தான் வளர்த்து வந்த செல்ல நாய்க்குட்டியை அனுப்பியுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த நபர் தனது நாயின் கழுத்தில் ஒரு அட்டையை மாட்டி கடைக்கு அனுப்பியுள்ளார்.
அந்த அட்டையில், “வணக்கம் ஷாப்கீப்பர், தயவுசெய்து என்னுடைய நாயிடம் ஆரஞ்சு நிறமுடைய சீட்டோஸ் பாக்கெட்டை கொடுத்து விடவும். சிவப்பு நிற பாக்கெட் வேண்டாம், அவற்றில் காரம் அதிகமாக இருக்கிறது. நாயின் காலரில் ரூ 20 இணைத்துள்ளேன்” என்று எழுதியிருந்தார். அத்துடன் மேலும், நாயிடம் நீங்கள் ஒழுங்காக நடந்துகொள்ளாவிட்டால் அது கடித்துவிடும் எனவும் அந்த அட்டையில் எழுதி எச்சரித்திருந்தார்.
இந்தப் புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த நாயின் உரிமையாளர் அன்டோனியோ, “தனிமைப்படுத்தப்பட்டு 3 ஆம்நாள் ஆகிறது. எனக்கு சீட்டோஸ் வேணும். நாய் சீட்டோஸ் பாக்கெட்டுடன் வீட்டிற்கு வருகிறது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” எனப் பதிவிட்டிருந்தார்.
இதைப் பார்த்து பகிர்ந்த மக்கள், பலரும் பல்வேறு விதமாக தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், ” என்னுடைய நாய்க்குட்டியிடம் இதே மாதிரி நான் முயற்சி செய்தேன், ஆனால் வேலை செய்யவில்லை” என்று பெரும் சோகத்துடன் தெரிவித்திருந்தார்.
இதேபோல், சமீபத்தில் சைப்ரஸ் நாட்டில் ஒருவர் நாயை வாக்கிங் அனுப்பும்போது கண்காணிக்க கழுத்தில் கயிறு கட்டி ட்ரோன் மாட்டிவிட்ட ருசிகர சம்பவமும் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.