திருமணமான பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி தொந்தரவு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள காஜிமார் பகுதியில் முகமதுகான் என்பவர் வசித்து வருகிறார். இவரும் புதூர் பகுதியில் வசித்து வரும் 24 வயதுள்ள பெண் ஒருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். பின்னர் முகமதுகான் அந்தப் பெண்ணை காதலிப்பதாகக் கூறி உள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நடந்துவிட்டது. இதனால் அந்த பெண் முகமதுகானிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த முகமதுகான் அந்தப் பெண்னிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொந்தரவு செய்துள்ளார். மேலும் தகாத வார்த்தைகளால் அந்தப் பெண்ணை திட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகமதுகானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.