கொரோனா பரவும் அபாய பகுதியாக தமிழ்நாடு முழுவதும் அறிவிப்பு, நடவடிக்கை எடுக்க வெளியிடப்பட்டுள்ள அறிக்கை..!!
நோய் தடுப்பு மருந்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 1939-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதாரத் சட்டத்தில் 62 ஆவது பிரிவின் கீழ் பொது சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோயாக கொரோனா அறிவிக்கப்பட்டதாகவும். 76 ஆவது பிரிவின் கீழ் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் எனவும் கூறப்பட்டுள்ளது.
1897ஆம் ஆண்டு கொள்ளை நோய் சட்டத்தின்படி வழிகாட்டு நெறிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபங்கள், பூங்காக்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் தேவையான எண்ணிக்கையில் தண்ணீர் குழாய்கள், வாஸ்பேசன், திரவ கரைசல், கைகழுவும் சோப்பு வைக்க வேண்டுமென்றும், கட்டிடத்திற்குள் நுழையும் முன்பும், வெளியேறும் போதும் கைகளை கழுவிய பிறகே அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆய்வகங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் கொரோனா குறித்த தகவல்களை உடனடியாக 24 மணி நேரத்திற்குள் பொது சுகாதாரத் துறைக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும், அவ்வாறு தெரிவிக்க தவறினால் அங்கீகாரமம், அனுமதியும் ரத்து செய்யப்படுவதுடன் சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவ்வப்போது கிருமி நாசினி தெளித்து தொற்று நோய் ஏற்படாதவாறு பராமரிக்கப்பட வேண்டும். அதே போல நோய்தொற்று நடவடிக்கைகள் எடுக்கத் தவறும் மருத்துவமனைகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவுரைகளை கடைபிடிக்க தவறுபவர்களின் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் சட்டம் கொள்ளைநோய் ஆகியவற்றின் கீழ் சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதே போல இந்திய தண்டனை சட்டத்தின்படி 188 ஆவது பிரிவின் கீழ் 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.