மனிதர்களாகிய நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே இருந்து வருகிறது. ஒவ்வொருவரின் உடலினுள் இருக்கும் இந்த சக்தி நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து, வலுப்படுத்துகிறது. சிலர் பிறக்கையில் அவருக்கென்று இருக்கும் பிறவி குறைபாடு தவிர்த்து, பிறக்கக்கூடிய அனைவருக்குமே நோய் எதிர்ப்பு சக்தி ஒரே அளவில் தான் இருக்கிறது. ஆனால் நாளடைவில் பல்வேறு காரணங்களினால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி குறையும். நம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி ஏன் குறைகிறது ? அதை தடுப்பதற்கு நாம் என்ன செய்யலாம் ? என்பது குறித்து பார்ப்போம்
நோய் எதிர்ப்பாற்றல் என்றால் என்ன ?
நம் உடலில் ஏதேனும் சில பிரச்சனைகள் ஏற்படுமாயின் அதை எதிர்த்துப் போராடுவதற்கு நம் உடலே அதற்கான தற்காப்பு மண்டலத்தை வைத்துள்ளது. இது (Immune system) என்று அழைக்கப்படும். இது நம்முடைய ரத்த மண்டலத்தில் இணைந்துள்ள மண்டலமாகும்.
இவற்றின் செயல்பாடு மற்றும் நம் உடலிலுள்ள குறைபாடுகளை எதிர்த்து போராட கூடிய ஆற்றலை தான் நாம் நோய் எதிர்ப்பு ஆற்றல் என்று அழைக்கிறோம்.
நோய் எதிர்ப்பாற்றல் எதற்காக குறைகிறது ?
நம்முடைய உடலில் ஊட்டச்சத்து குறைவினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.
அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம், புகை பழக்கம் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.
துரித உணவுப்பழக்கம் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றது.
உடல் எடை அதிகம் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றது.
குறைவான உறக்கத்தை மேற்கொள்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.
உடற்பயிற்சி குறைந்த அளவு மேற்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றது.
மன அழுத்தம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றது.
இவ்வாறான காரணங்களினால் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுகின்றது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு யாருக்கு அதிகமாக உண்டாகிறது ?
மாசடைந்த சூழலில் மக்கள் நெருக்கமாக வாழ்வதாலும், கதிரியக்கம் அதிகம் வெளிப்படுகின்ற பணிகளில் தன்னை ஈடுபடுத்தி இருப்பவர்களுக்கும் நோயெதிர்ப்பு குறைபாடு அதிகம் ஏற்படுகிறது.
அடிக்கடி ஏதாவது நோய்க்கு அவதிப்படுபவர்களுக்கும், மருந்து மாத்திரைகளை அதிகமான அளவுக்கு உட் கொள்பவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.
சரியான வயதில் தடுப்பூசி போடாமல் தவறவிடுபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவது அதிகமாக இருக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான அறிகுறிகள் என்னென்ன ?
நம்முடைய உடலில் சோர்வு ஏற்படும்
மாதமாதம் சளி உண்டாகி சிரமப்படுவோம்.
ஜலதோசம் உண்டாகும்
காய்ச்சல் இருக்கும்
ஒவ்வாமையால் கஷ்டப்படுவோம்
காயங்கள் ஆற நீண்ட நாள் ஆகும்
வயதுக்கு ஏற்ற அளவு உடலில் பருமன் இருக்காது
அதிகமாக வாய்ப்புண் ஏற்படும்
சிறுநீரக தொற்று உண்டாகும்
பசி குறைவால் கஷ்டப்படுவோம்
செரிமான கோளாறு ஏற்படும்
வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுவோம்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும் ?
கர்ப்பிணிகளுக்கு கர்ப்பகால உபசரிப்பு உரிய முறையில் இருக்கவேண்டும்.
பிறந்த குழந்தைக்கு குறைந்தது 6 மாதங்களாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
சிறுதானிய உணவு, பருப்பு உணவு, இனிப்பு வகைகள், கொழுப்பு உணவை தேவைக்கு ஏற்றார் போல சாப்பிட வேண்டும். முளைக்கட்டிய தானியங்கள் உதவும்
தினம்தோறும் ஒவ்வொரு வண்ணத்தில் உள்ள காய், பழம், கீரை சாப்பிடுவது அவசியம்.
குறிப்பாக (காய் : கேரட், முட்டைகோஸ்) ( கீரை : முருங்கை, அகத்தி) ( பழங்கள் : ஆப்பிள், ஆரஞ்சு பழம் சாப்பிடலாம்)
வெள்ளைச் சர்க்கரையை பயன்படுத்துவதைவிட நாட்டுச் சர்க்கரை, வெல்லம், தேன், கருப்பட்டி போன்றவை உடலுக்கு நல்லது.
பால், தயிர், வெண்ணெய், நெய், காளான், மீன், காய்கறிகள் சூப், அசைவ சூப் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பருப்புகளில் உளுந்தும், பாதாம் பருப்பு அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகும்.
வெங்காயம், வெந்தயம், வெள்ளைப்பூண்டு, இஞ்சி, மிளகு, மஞ்சள், சீரகம், ஏலக்காய், கொத்தமல்லி, ஆகியவற்றை தினமும் உணவு தயாரிப்புகளில் கட்டாயம் பயன்படுத்தி, கட்டாயம் உட்கொள்ள வேண்டும்.
இறைச்சி , முட்டை அளவோடு சாப்பிட்டால் நல்லது
கேக், ரொட்டி, நூடுல்ஸ், பரோட்டா, சிப்ஸ், சாக்லேட், குளிர்பானம் போன்றவற்றை நாம் தவிர்ப்பது உடலுக்கு சிறப்பு.
கட்டாயமாக மூன்று லிட்டர் தண்ணீரை தினமும் பருக வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் உறக்கம் அவசியம்.
ஒவ்வொருவரும் உடற்பயிற்சி அல்லது விளையாட்டில் ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது நம்முடைய உடலை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
காலையில் நடைபயிற்சி, நீச்சல், சைக்கிள், யோகா போன்றவை இதற்கு உதவும்.
உடல் பருமனாவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மது பழக்கத்தை மறந்து, புகைப்பிடிப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.
மனக்கவலை, மன அழுத்தம் வரக்கூடாது.
சுத்தமான சூழ்நிலையில் வசிப்பது மிக மிக முக்கியம்.
வயதுக்கு ஏற்றவாறு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
சுத்தமாக இருங்கள், சுய மருத்துவம் அவசியமற்றது.