உத்தரகண்ட் மாநிலத்தில் கூலி தொழிலாளர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டு அவர்களுக்கு குடிநீர், உணவு ஆகியவை விநியோகிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை செயலாளர் அமித் நேகி அனைத்து மாவட்ட மாஜிஸ்திரேட்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் மொத்தம் 27 மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது. இதன் எதிரொலியாக 144 தடை உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2மடங்காக உயர்ந்தது. தற்போது, நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது. அதில் இந்தியர்கள் 677 பேரும், வெளிநாட்டவர் 47 பேரும் அடங்குவர். கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில், உத்தரகண்ட் மாநிலத்தில் 5 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக தினசரி கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்ட எண்ணற்றோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் மக்கள் குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு சில தொண்டு நிறுவனங்களும் அவ்வபோது உதவிகரம் நீட்டி வருகின்றனர். இந்த நிலையில் தான் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்கள், தினசரி கூலித்தொழிலாளர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியோரின் எண்ணிக்கையை பட்டியலிட அனைத்து மாவட்ட மஜிஸ்திரேட்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கு போதிய உணவு உள்ளிட்ட வசதிகளை வழங்க பேரிடர் மேலாண்மை செயலர் உத்தரவிட்டுள்ளார். 144 தடை காரணமாக சாமானிய மக்கள் யாரும் பாதிப்படைய கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.