இப்பொழுது குளிர்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கி விட்டது, அனைத்து பிரச்சினைகளும் சமாளிக்கும் ஒரே காலை உணவு என்றால் பழைய சாதம் தான். எனவே இதன் நன்மைகளை பற்றி அறிவோம்..
பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்திற்கு பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அமெரிக்கர்கள், நியூட்ரிஷியன் அசோசியன் கூட இதன் பெருமையும், நன்மைகளையும் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளனர். இந்த உணவு அமெரிக்கர்களுக்கும், பிற நாட்டினருக்கும் வேண்டுமென்றால் அதிசயமாக இருக்கலாம். ஆனால் நம் முன்னோர்களுக்கு அன்றாடம் பார்த்து, பார்த்து பழகிப்போன இதம் தரும் காலை உணவு.
முதல் நாள் வடித்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து, அடுத்த நாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தைக் அமிர்தம் என்றே சொல்லலாம். நிறைய பேருக்கு இது உடலுக்கு நல்லது என்று மட்டும் தான் தெரியும். இதன் உண்மையான நன்மைகளை தெரிந்தால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்.
இந்த பழைய சாதத்தில் தான் அறிய விட்டமின்களான பி6 பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்க மருத்துவர் ஒருவர். அதுமட்டுமல்ல உடலுக்கு குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் பில்லியன்ஷாப் பாக்ட்ரியா பெருகி நம் உணவு பாதையை ஆரோக்கியமாக வைக்கிறது. மேலும் இதோடு 2 சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
அதனால்தான் அந்த காலத்தில் நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள். இன்றைக்கு ஒரு குறிப்பிட்ட சீசன் வந்தாலே டெங்கு, மலேரியா, பன்றிக்காய்ச்சல் என்று ஒவ்வொருவரும் தப்பிப் பிழைப்பது பெரும்பாடாக உள்ளது. இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பதே காரணமாகும். சில பேர் கூறுவார்கள் பழைய சாதம் சாப்பிட்டால் தூக்கம் வரும், உடல் பருமன் உண்டாகும் என்பதெல்லாம் ஆனால் அது உண்மை அல்ல.
எதையுமே உழைப்பிற்கு ஏற்றார்போல் அளவோடு சாப்பிட்டால் எந்த நோயும் வராது. இந்த பழைய சாதத்தை சாப்பிடும்பொழுது இதில் லட்சக்கணக்கான நல்ல பாக்டிரியாக்கள் உள்ளதால், செரிமான பிரச்சனைகள் நீங்கி, செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், காரணிகள் அதிகம் உள்ளதால் இதை சாப்பிடும் பொழுது இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் உடல் உள்ளுறுப்புகளை பாதுகாப்பதோடு, உடலை தாக்கும் நோய் கிருமிகளை எதிர்க்கும் தன்மை உடையது.
இதனால் உடலில் அடிக்கடி ஏற்படும் பல பிரச்சனைகளை தடுக்கலாம். முக்கியமாக தினமும் காலையில் பழைய சோற்றினை சாப்பிட்டு வந்தால் விரைவில் முதுமை தோற்றம் ஏற்படுவதை தடுக்கலாம். அதேபோன்று எலும்புகள் வலிமையடையும். இன்று நிறையபேருக்கு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அடிக்கடி பழைய சாதம் சாப்பிட்டால் எலும்பு பலம் பெறும் என்று ஆய்வில் கூறப்படுகிறது.
அதிலும் இன்று நிறைய பேருக்கு உள்ள பெரிய பிரச்சனை உடல்சூடு, இதனால் தான் அல்சர் முதல் முடி கொட்டுவது வரை பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் காலை உணவாக பழைய சாதம் கொஞ்சம் சாப்பிட்டுப் பாருங்கள் அன்று முழுவதும் உடல் குளுகுளுவென்று இருக்கும்.
முக்கியமாக இதில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளதால் இதனை தினமும் சாப்பிடும் பொழுது மலச்சிக்கல் என்ற பிரச்சனை இருக்கவே இருக்காது. பொதுவாக மலச்சிக்கல் என்பது மனிதனை முடக்கிவிடும் மோசமான ஒன்றாகவும். நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். எ அதே போன்று இன்று பலரும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பழைய சாதம் இந்த ரத்த அழுத்தத்தை குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் முறையற்ற உணவு முறையினால் ஏற்படும் அல்சர் இக்கால தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் பிரச்சனை ஒன்றாகும். இவர்கள் பழைய சாதத்தை தினமும் சாப்பிடும் பொழுது அல்சர் குணமாகி விடும். இதற்கு காரணம் இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தான். ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்குள் வந்து டீ, காஃபி என்று அறிமுகப்படுத்தினார். அன்றே நீராகாரமும் மறைந்துவிட்டது.
அந்த காலத்தில் நம் முன்னோர்கள் காலையில் எழுந்ததும் முதல் பானம் இந்த நீராகாரம் தான். இது அத்தனை மருத்துவ குணம் வாய்ந்தது. அதனால் தான் நம் தாத்தா பாட்டிகள் அத்தனை வயது வரையிலும் நோயில்லாமல் ஆரோக்கியமாக இருந்தார்கள். இதில் என்ன ஒரு வருத்தத்துக்குரிய விஷயம் என்றால், நாம் சத்துள்ள பாரம்பரிய உணவை வெளிநாட்டினர் சொல்லி தெரிந்துகொள்வது தான்.
பரவாயில்லை அவர்களுக்கு நம் உணவின் மதிப்பு தெரிந்திருக்கிறது என்பது நமக்கும் பெருமை தான். இதுபோல் மண்பானையில் தண்ணீர் ஊற்றி செய்யப்படும் பழைய சோறு இன்னும் அதிக சுவை கூடிய மணமுடன் இருக்கும். இன்றும் கிராமப்புறங்களில் மண்பானையில் தான் பழைய சாதம் போட்டு வைப்பார்கள்.
இதற்கு மிகவும் சிறந்தது கைகுத்தல் அரிசி. ஒரு மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு சுத்தமான தண்ணீரை ஊற்றி வைத்து மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து சிறிது மோர் சேர்த்து சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடும்பொழுது அமிர்தமாக இருக்கும். இதிலுள்ள மோர் மற்றும் வெங்காயம் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தியை தரும் என்பதால் இதை சாப்பிட்டு வந்தால் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.
இனி பழைய சாதத்தை அலட்சியப்படுத்தாமல் தினமும் முடியவில்லை என்றாலும் வாரத்தில் மூன்று நாட்களாவது சாப்பிட்டு இதனால் புது நன்மைகளை பெற்றிடுங்கள்.