ஊரடங்கு உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
இன்று காலை பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவு , கொரோனா அறிவுறுத்தலை முழுமையாக கடைபிடிக்கவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்திருந்தார். பொதுமக்கள் சிலர் வைரஸை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், அரசுகள் கொடுக்கக்கூடிய அறிவுரைகளை முழுமையாக பின்பற்றவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மிக முக்கியமான சில அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் ஊரடங்கு உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசாங்கம் பிறப்பிக்கக்கூடிய உத்தரவுகளையும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்றும், இதனை மீறக்கூடிய பொதுமக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முக்கிய அறிவிப்பு வந்திருக்கிறது.
அதேபோல தனிமைப்படுத்தப்பட்டவர்கள் , கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தபட்டவர்கள், கொரோனா நபர்கள் அறிகுறிகள் இருக்கலாம் என்று தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் அனைவரும் அவர்கள் வீட்டிற்கு உள்ளே இருப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள் என்று ஒரு அறிவுறுத்தல் அனைத்து மாநில அரசுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.