வருகிற 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு விடுமுறையுடன், பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறையும் விடப்படுகிறது. இந்த தொடர் விடுமுறையின் காரணமாக அனைத்து மக்களும் அவரவர் சொந்த ஊருக்கு செல்வதிலும், இந்தியாவில் உள்ளிட்ட சுற்றுலா நகரங்களுக்கு செல்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதால் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் ஏற்கனவே முன்பதிவுகள் முடிந்து விட்டது.
இதனால் பயணிகள் தற்போது விமான நிலையத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தூத்துக்குடி, திருச்சி, கோவை, கொச்சி, மதுரை, திருவனந்தபுரம் செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனையடுத்து சென்னையில் இருந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் விடுமுறையின் காரணமாக விமான பயண டிக்கெட்டுகளுக்கான கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்திருப்பது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது வழக்கமாக தூத்துக்குடிக்கு ரூ.5,300 வரை இருந்த விமான கட்டணம் தற்போது ரூ.14,500 வரையும், மதுரைக்கு ரூ.3,600 வரை இருந்த விமான கட்டணம் தற்போது ரூ.14,000 ஆகவும், கோவைக்கு ரூ.3,500 ஆக இருந்த விமான டிக்கெட் தற்போது ரூ.13,500 வரையும், திருச்சிக்கு ரூ.3,500 என இருந்த டிக்கெட் தற்போது ரூ.10,000 மாகவும், கொச்சுக்கு ரூ.3,500 என இருந்த கட்டணம் தற்போது ரூ.19,500 வரையிலும் அதிகரித்துள்ளது. இப்படி டிக்கெட் விலை உயர்ந்தாலும் மக்கள் தங்களது சொந்த ஊர்களில் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து வருவதாக கூறப்படுகிறது.