பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் பன்னு மாவட்டத்திலுள்ள ராணுவ கண்டோன்மென்ட் வளாகத்தில் பயங்கரவாத எதிர்ப்பு காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு பாகிஸ்தான் தலிபான் உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 33 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விசாரணை கைதிகளில் ஒருவர் போலீஸ்காரரை தாக்கி அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்துள்ளார். அதன்பின் அடைத்து வைக்கப்பட்டிருந்த மற்ற கைதிகளையும் விடுவித்ததையடுத்து அவர்கள் அனைவரும் சேர்ந்து போலீஸ் நிலையத்தை கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்த போலீசார் அனைவரையும் பிணைக்கைதிகளாக பிடித்த பயங்கரவாதிகள், தாங்கள் பாதுகாப்பாக தப்பி செல்வதற்கு உதவினால் பிணைக்கைதிகளாக விடுவிப்போம் என கூறியுள்ளனர். இது குறித்து இரண்டு நாட்களாக பயங்கரவாதிகளுக்கும், இராணுவ அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் சுமூகமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பயங்கரவாதிகள் தங்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை ராணுவ அதிகாரிகள் தெரிந்துகொண்டனர்.
இதனை பயன்படுத்திக் கொண்ட ராணுவ அதிகாரிகள் சிறப்பு அதிரடிப்படை வீரர்களை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பயங்கரவாதிகள் 33 பேரையும் சுட்டுக்கொன்று பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவித்துள்ளனர். இருப்பினும் இந்த அதிரடி தாக்குதலில் சிறப்பு அதிரடி படை வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.