நேற்று முன்தினம் காலை மாண்டஸ் புயல் கரையை கடந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து அரபிக் கடல் பகுதிக்கு சென்றது. இதனால் வட கடலோர தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மேலும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல் நாளையும், நாளை மறுநாளும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனையடுத்து வங்கக்கடலில் வருகிற 16-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது அடுத்த கட்டமாக புயலாக மாறுமா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை அதன் நகர்வை பொருத்து தான் கூற முடியும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போதைய கணிப்பின்படி, இது புயலாக மாறி இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதிகளில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும், அதே சமயம் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கான சாத்திய கூறுகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்படி “புயல் உருவாகும் நிலையில் ஏமன் நாடு ஏற்கனவே பரிந்துரைத்துள்ள மோகா எனும் பெயர் சூட்டப்படும் என வானிலை ஆய்வு மையம்” தெரிவித்துள்ளது.