வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்ததால் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே புயல் இன்னும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. வேலூர் அருகே 20 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வலுவிழந்து நிலை கொண்டு உள்ளதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வங்க கடலில் நாளை டிசம்பர் 12ஆம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சி 14ஆம் தேதி தீவிரம் அடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக கடந்த ஆறாம் தேதி முதல் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தடை நேற்று இரவு விளக்கிக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து வங்க கடல் பகுதியில் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.