உத்திரபிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் என்னும் நகரில் பனியாரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணம் நடைபெறுவதற்கு முன்பாக மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து மணமகன் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்காக மணமகன் ஊர்வலம் நடத்தப்பட்டு அதன் பின் அழைத்து வரப்பட்ட மணமகனை அவரது உறவினர்கள் மனப்பந்தலுக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் “மணமகளையும் உறவினர்கள் மனப்பந்தலுக்கு அழைத்து வந்த போது மணமகனை பார்த்த மணமகள் அவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” எனக் கூறி உடனடியாக வீட்டிற்கு சென்றுவிட்டார். அதாவது திருமணத்திற்கு முன்பாக மணமகன் எப்படி இருப்பார் என மணமகள் பார்க்கவில்லை என தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகனை அவரது உறவினர்கள் அமைதியாக இருக்கும் படி தெரிவித்துவிட்டு மணமகளிடம் பேசி சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் மணமகள் அதை கேட்க தயாராக இல்லை. “மாறாக தனக்கு கருப்பு நிற மணமகன் வேண்டாம். அதனால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என தெரிவித்துள்ளார். இதனையடுத்து கிராம மக்கள் மணமகளிடம் பேசி வழிக்கு கொண்டுவர முயற்சி செய்தபோது மணமகள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் பின் போலீசார் மணமகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இருப்பினும் மணமகள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.