புதுச்சேரியில் இருந்து சென்னை காரைக்காலுக்கு இயக்கப்பட்டு வந்த புதுச்சேரி அரசு பேருந்து சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் தீவிர புயலாக நிலவிக் கொண்டிருக்கக்கூடிய மாண்டஸ் தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 260 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த தீவிர மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கன மழை முதல் மிதமான மழை பெய்து வருகின்றது..
மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது.இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும் ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காலை முதல் இயக்கப்பட்டு வந்த பேருந்துகள், இனிவரும் நேரத்தில் காற்று சற்று பலமாக வீச கூடும் என எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்தமாக சென்னைக்கு போக்குவரத்து சேவை துண்டிக்கப்படுகிறது என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. அதேபோல காரைக்கால் பகுதிக்கும் பேருந்துகள் இயக்கப்படாது என புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. புதுச்சேரி போக்குவரத்து கழகம் காலையிலிருந்து பேருந்துகளை இயக்கி வந்த நிலையில் மதியத்தில் இருந்து பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது.