தற்போது மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைபடுத்த வேண்டும் என்ற மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையானது அதிகரித்துள்ளது. மாநிலங்களை பொறுத்தவரை, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை முதல் முதலில் வெளியிட்டார். 2022 மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, சட்ட சபையில் 7 லட்சம் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை நடைமுறைபடுத்துவதாக அவர் கூறினார்.
இதையடுத்து பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகளும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைபடுத்துவதாக அறிவித்துள்ளது. இதற்கு மத்தியில் பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைபடுத்துவது எதிர் காலத்திற்கு உகந்ததாக இருக்குமா என்ற கேள்வியானது அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
ஏனெனில் கடனில் சிக்கித் தவிக்கும் மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைபடுத்தினால், அது வரக்கூடிய காலங்களில் அவர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இது அடுத்தடுத்து ஆட்சிக்கு வர இருக்கும் அரசுகளுக்கு நிதிச் சுமையை அதிகரிக்கும். மாநில அரசுகளின் இந்த நடவடிக்கையானது எதிர்காலத்தில் வரிசெலுத்துவோர் மீது சுமையை ஏற்படுத்தும் என நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் பெர்ரி அண்மையில் தெளிவாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.