மத்திய அமைச்சர் எல். முருகன் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். அதில் மேட்டுப்பாளையம்-கோவை ரயிலை ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்க வேண்டும். சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்லுமாறும் அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அதோடு இதன் மூலம் பல்வேறு விதமான பயணிகள் பயனடைவார்கள் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் எல். முருகனின் கடிதத்திற்கு இணங்கி மத்திய ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மேட்டுப்பாளையம்-கோவை ரயில் இனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்கப்படும். இதனால் வாரத்தின் 7 நாட்களுக்கும் ரயில் சேவை இயங்கும். சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இனி பாபநாசம் ரயில்வே நிலையத்திலும் நின்று செல்லும் எனவும் அறிவித்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பால் நூற்றுக்கணக்கான பயணிகள் பயனடைவார்கள்.