போன் செய்தால் கொரோனா விழிப்புணர்வு காலர் டியூன் வரும் நிலையில் அந்தந்த மாநில மொழிகளில் வழங்க அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீனாவை அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ் நோய்த் தொற்று, தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல், தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 3000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 42 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதால் நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியது.
அதன் ஒரு பகுதியாக யாருக்கு போன் செய்தாலும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மொபைல் போன்களுக்கு காலர் டியூன் அமைக்கப்பட்டுள்ளது. அந்த “காலர் டியூன்” ஆங்கிலத்தில் இருக்கிறது. இதனால் இந்த விழிப்புணர்வு செய்தியை மாநில மொழிகளில் வழங்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Automatic awareness voice message on #CoronavirusOutbreak when we make calls is a welcome step. Would be even more impactful if @MoHFW_INDIA considers to have the same in respective regional languages.@drharshvardhan
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 9, 2020
இதுதொடர்பாக மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தன் ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா வைரஸ் தவிர்ப்பு குறித்த செல்போன் காலர் ட்யூன் வடிவிலான விழிப்புணர்வு செய்தி வரவேற்கத்தக்கது. அதேசமயத்தில் விழிப்புணர்வு செய்தியை அந்தந்த மாநில மொழிகளில் வழங்குவது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்” என பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் மத்திய சுகாதாரத் துறையின் ட்விட்டர் பக்கத்தை கனிமொழி ‘டேக்’ செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தவிர்ப்பு குறித்த செல்பேசி காலர் ட்யூன் வடிவிலான விழிப்புணர்வு செய்தி மிகவும் பயனுள்ளது. ஆனால், நாட்டின் கடைக்கோடி குடிமகன் கூட செல்பேசியை பயன்படுத்தும் நிலையில், ஆங்கிலத்தில் மட்டும் செய்தியை வழங்குவது முழுமையாக பயனளிக்காது. மாநில மொழிகளிலும் வழங்க வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) March 9, 2020
அதேபோல பாமக நிறுவனர் ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா வைரஸ் தவிர்ப்பு குறித்த செல்போன் காலர் ட்யூன் வடிவிலான விழிப்புணர்வு செய்தி மிகவும் பயனுள்ளது. ஆனால் நாட்டின் கடைக்கோடி குடிமகன் கூட செல்பேசியை பயன்படுத்தும் நிலையில் ஆங்கிலத்தில் மட்டும் செய்தியை வழங்குவது முழுமையாக பயனளிக்காது. மாநில மொழிகளிலும் வழங்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.