சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை தமிழர் நகரில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு லேப் டெக்னீசியனான ரேகா(35) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி வடபழனி முருகன் கோவிலில் வைத்து ரேகாவுக்கும், ராஜாசேகரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 19-ஆம் தேதி ரேகா தாய் வீட்டிற்கு சென்று அங்கிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ராஜசேகரன் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து செல்ல வருவதாக மாமனாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் பிரகாஷும், கௌரியும் காய்கறி வாங்குவதற்காக மார்க்கெட்டுக்கு சென்றுவிட்டனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த ரேகா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரேகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் திருமணமான 14 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.