கோவாவில் நடந்த 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவில் ஜெய்பீம் படம் திரையிடப்பட்டது. இதனை முன்னிட்டு நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அத்திரைப்பட இயக்குநர் ஞானவேல் பேசியதாவது “சட்டச் செயலாக்கம், நீதி பரிபாலனத்திலுள்ள குறைபாடுகளை துணிச்சலான முறைகளில் படமாக சித்தரித்த ஜெய்பீம் வெறும் வார்த்தை அல்ல அது ஒரு உணர்வு ஆகும். அத்துடன் விளிம்புநிலை மக்களுக்காக டாக்டர் பிஆர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட சொல் அது. ஜெய்பீம் திரைப்படத்திற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் கற்பனைக்கு எட்டாத வரவேற்பால் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
உலகம் முழுவதும் இருக்கக்கூடிய பிரச்சினை என்பதால், அது அனைவரையும் இணைத்து உள்ளது. கல்வி ஒன்றே மக்களை அதிகாரப்படுத்தும் கருவி எனும் அம்பேத்கரின் குரலை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. நிஜ வாழ்க்கையில் ஹீரோக்களுக்கு இடம் இல்லை. கல்வி வாயிலாக ஒருவர் தன்னைத் தானே ஹீரோவாக உயர்த்திக்கொள்ளவேண்டும். மேலும் ஒடுக்கப்பட்டவர்கள் அதிகாரம் பெறும்போதுதான் தன்னுடைய திரைப்படம் தன் உண்மையான இலக்கை அடையும்” என்று அவர் தெரிவித்தார்.