பெரம்பூர் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பெரம்பூர் போர்க்ஸ் -அஷ்டபூஜம் சாலை வழியாக நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் 15 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரிய அதிகாரிகள் ஆகியோருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரிய தலைமை என்ஜினீயர் யர் ராமசாமி, பகுதி என்ஜினீயர் வைதேகி உள்ளிட்ட பலர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்துள்ளனர்.
அதில் பூமிக்கு அடியில் செல்லும் சுமார் 3 அடி அகலம் கொண்ட கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து கழிவுநீர் வெளியேறியதால் மண் அரிப்பு மூலம் பள்ளம் ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பட்டாளம் பகுதியில் இருந்து டவுட்டன் நோக்கி செல்லும் வாகனங்கள் ஒட்டேரி பிர்க்கிளின் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. மேலும் எழும்பூர், புரசை வாக்கம் வழியாக பெரம்பூர், வியாசர்பாடி நோக்கி வரும் வாகனங்கள் புரசைவாக்கம் மற்றும் சூளை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.