குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில், 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தல் பணிகளுக்காக குஜராத் மாநிலத்திற்கு துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அப்போது 2 துணை ராணுவ அதிகாரிகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது 2 பேரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி சுட்டுக் கொண்டதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர். இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், 2 அதிகாரிகளும் மோதிக்கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் தேர்தல் நடைபெறும் சமயத்தில் 2 துணை ராணுவ அதிகாரிகள் மோதிக் கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.